Friday, January 17, 2014

2-வது முறை சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு

2013 ம் ஆண்டுக்கான சிறந்த கால் பந்து வீரராக போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்கப் பந்து விருது அளிக்கப்பட்டது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப்பந்து விருது வழங்கப்பட்டு வருகிறது.

வீரர்களின் திறமை அடிப்படையில் 209 சர்வதேச அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் அளிக்கும் ஓட்டு அடிப்படையில் சிறந்த வீரர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

2013 _ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனெல் மெஸ்சி(பார்சிலோனா), போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்), பிரான்சைச் சேர்ந்த பிராங்க் ரைபரி (பேயான் மூனிச் ) ஆகிய 3 பேர் இடம் பெற்று இருந்தனர்.

இதில் ரொனால்டோ சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்கப் பந்து விருது வழங்கப்பட்டது.

அவர் 2_வது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்கு முன்பு 2008_ம் ஆண்டு சிறந்த வீரர் விருதை பெற்று இருந்தார்.

போர்ச்சுகல் வீரரான ரொனால்டோ மொத்தம் 1365 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். அவர் 2013_ம் ஆண்டில் 59 போட்டியில் 69 கோல்கள் அடித்திருந்தார்.

தொடர்ந்து 4 ஆண்டுகள் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை (2009, 2010, 2011, 2012) பெற்ற லியோனல் மெஸ்சி 1197 புள்ளிகள் பெற்று 2_வது இடத்தைப் பிடித்தார்.