Friday, January 10, 2014

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் கடந்து வந்த பாதை



இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து இதுவரை 7 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில், 4 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன. 3 தடவை ஏவப்பட்ட ராக்கெட்டுகள் தோல்வியடைந்தன.
இஸ்ரோ முதன்முதலாக 2001-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட்டை ஜிசாட்-1 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதையடுத்து 2003-ம் ஆண்டு மே 8-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட், ஜிசாட்-2 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பின்னர், 2004-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-எப்01 ராக்கெட், எஜுசாட் (ஜிசாட்-3) செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
2007-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.- எப்04 ராக்கெட், இன்சாட்-4சிஆர் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்படி 4 முறை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட், 3 முறை தோல்வியடைந்தது.
2006-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-எப்02 ராக்கெட்டை, இன்சாட்-4சி செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதையடுத்து 2010-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட்டை, ஜிசாட்-4 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவ நடந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
பின்னர், 2010-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-எப்06 ராக்கெட்டை, ஜிசாட்-5P என்ற செயற்கைக்கோளுடன் விண்ணில் அனுப்பும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
8-வது தடவையாக 2014-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி.-டி5 ராக்கெட், ஜிசாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.