Friday, March 7, 2014

காமன்வெல்த் போட்டி: இந்திய வீராங்கனைகளுக்கு உதகையில் பயிற்சி

மலைப் பாதையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகள்காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் உதகையில் தொடங்கியது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3 வரை பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக இந்திய நடுத்தர மற்றும் தொலைதூர ஓட்டப் பந்தய வீராங்கனைகள் பிரீஜா ஸ்ரீதரன், சுதா சிங், கவிதா ரௌத், மோனிகா அத்தேரி, ஓ.பி.ஜெய்சா, ஜும்மா காட்டன், சுஷ்மா தேவி ஆகிய 8 வீராங்கனைகளும் உதகையை அடுத்த வெலிங்டனில் உள்ள எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயிற்சியைத் தொடங்கினர்.
இவர்கள் அனைவரும் ஜூன் 2-ம் தேதி வரை இங்கு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்திய அணியின் நடுத்தர மற்றும் தொலைதூர ஓட்டப் பந்தய பயிற்சியாளர் நிகோலாய் ஸ்னேசரேவ், எம்.ஆர்.சி. மையத்தில் உள்ள பிரிகேடியர் சுரேஷ் உள்ளிட்டோர் 8 வீராங்கனைகளுக்கு பயிற்சியளிக்கின்றனர்.
நடுத்தர மற்றும் தொலைதூர ஓட்டப் பந்தயங்களில் அதிகளவில் மூச்சிரைக்கும் என்பதாலேயே “ஹை ஆல்ட்டிடியூட்” பகுதியான உதகையில் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதகையில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும்.
ஆக்சிஜன் குறைவான சூழலில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடும்போது மூச்சிரைப்பைக் கட்டுப்படுத்த முடியும். எனவே காமன்வெல்த் போட்டியின்போது வீராங்கனைகள் தங்களுக்கு ஏற்படும் மூச்சிரைப்பைக் கட்டுக்குள் வைத்து தொடர்ந்து வேகமாக ஓட முடியும்.
பயிற்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் எம்.ஆர்.சி. ராணுவ மையம் செய்துள்ளது. ராணுவ சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மலைப் பாதையில் வீராங்கனைகளுக்கு சுமார் 1.5 கி.மீ. தூரம் “அப்ஹில் டிரெயினிங்” (மலைப் பாதையில் மேல் நோக்கி ஓடிவிட்டு, பின்னர் கீழ் நோக்கி இறங்குதல்) அளிக்கப்படுகிறது.
தினந்தோறும் காலை 7 மணி முதல் 8 மணி வரையும், பின்னர் 9.30 மணி முதல் 11.30 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாலையில் 4 மணி முதல் 6.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதவிர ராணுவ முகாமில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் 8 தடகள வீராங்கனைகளும் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு ராணுவம் பாதுகாப்பு அளித்து வருகிறது.
மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளராக சாய் பயிற்சியாளர் தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சாய் சார்பில் தமிழகத்தில் டென்னிஸ் பயிற்சியளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இணைகிறார் தமிழக வீராங்கனை சூர்யாதமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த சூர்யா, உதகையில் பயிற்சி முகாமில் இன்று இணைகிறார். அவர் 5,000 மீ., 10,000 மீ. ஓட்டத்திற்காக பயிற்சியில் ஈடுபடவுள்ளார். தமிழகத்தின் சார்பில் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கும் ஒரே வீராங்கனை சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.